துன் மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டது தேமு

கோலாலம்பூர் –

நாட்டு அரசியல் நெருக்கடியில் நேற்று திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பமாக இடைக்காலப் பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கிய ஆதரவை தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் மீட்டுக் கொண்டன.

அதே சமயம் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கட்சிகள் இன்றி தனிநபர்கள் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மகாதீர் விரும்புவதால் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

ஜசெகவுடன் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் எனும் எங்களுடைய நிபந்தனையுடன் கூடிய ஆதரவுக்கு எதிராக மகாதீரின் இந்த நிலைப்பாடு அமைந்திருக்கிறது என்று அவர் சொன்னார்.

ஜசெக இன்றி ஒரு கூட்டணியை அமைத்தால் மகாதீருக்கு ஆதரவு அளிப்போம் என்பது எங்கள் நிலைப்பாடு. ஆனால், இப்போது அந்த ஆதரவை நாங்கள் மீட்டுக் கொள்கிறோம் என்று அவர் புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் கூறினார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகின்றோம் என மாமன்னரிடம் தெரிவித்து விட்டோம் எனவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here