சென்னை –
தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என். ஆர். இளங்கோ, அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் தம்பிதுரை, கே.பி. முனுசாமி, ஜி.கே. வாசன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் புதன்கிழமையுடன் நிறை வடைந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டப் பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்தார்.
திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் அக்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.