மாட்ரிட், ஏப்.12-
கொரோனா தாக்கத்தால் ஸ்பெயின் நாடு அவஸ்தைக்குள்ளாகி வருவதைப் போல மலேசியாவிலும் நேர்ந்து விடக் கூடாது என்கிறார் மாட்ரிட் நகரில் வசிக்கும் நோர் அஸ்லின் ரசாலி என்ற மலேசியர்.
நோர் அங்குள்ள லீன் ஆண்ட்ரஸ் ஸ்கார்ப் என்ற நிறுவனத்தில் இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார்.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா கொடுமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
என்னவென்று சொல்வது?
16,353 பேர் இறந்து விட்டார்கள்.59,109 பேர் மீண்டு வந்து விட்டார்கள். 161,852 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
பரபரப்பான மாட்ரிட் நகர் தற்போது சூனிய நகராக மாறிவிட்டது. பித்து பிடித்தவர்கள் போல மக்கள் மாறி விட்டார்கள்.
பணத் தேவையை தூக்கி எறிந்து விட்டு உயிர்த் தேவையை நோக்கி மக்கள் ஓடுவதைப் பார்க்க குலை நடுக்கம் ஏற்படுகிறது.
ஸ்பெயின் அரசாங்கம் கொரோனாவை எதிர்த்து மூர்க்கப் போராட்டம் நடத்தி வருகிறது.
இருந்தாலும், இன்று கொரோனாவால் எவரும் இறக்கவில்லை என்ற செய்திதான் வரவே மாட்டேன் என்கிறது.
அடுத்த கட்டம் இதை விட மோசமாக இருக்கும் என்பதாகத்தான் சுருண்டு விழும் மனிதப் பிணங்கள் காட்டுகின்றன.
மலேசியர்களே, மெத்தனப் போக்கு வேண்டாம்.
நமக்கு ஒன்றும் நேர்ந்து விடாது என்று நினைத்து விடாதீர்கள். நமக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது என்பதுதான் நான்கு வாரங்களுக்கு முன்பு வரை ஸ்பெயின் மக்களின் சிந்தனையாக இருந்தது.
மலேசியர்களுக்கு இன்னமும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவகாசம் உள்ளது.
வீட்டிலேயே இருங்கள். எந்த ரூபத்தில் கொரோனா கிருமிகள் உடலில் நுழையும். நுழைந்த கிருமிகள் எப்படி குடும்ப உறுப்பினர்களைத் தாக்கும் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம்.
மலேசிய அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்றுங்கள். மலேசியர்களுக்கு இன்னமும் அவகாசம் உள்ளது என நோர் கேட்டுக் கொண்டுள்ளார்.