வாஷிங்டன் –
அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்புத்துறை நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு கடந்த 2016இல் அமெரிக்கா வழங்கியது. இதன் மூலம் மிக நவீன தொழில் நுட்பமிக்க போர் தளவாடங்களை பெறும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
இந்த நிலையில் 155 மில்லியன் டாலர் மதிப்புள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மார்க் 54 என்ற இலகு ரக நீருக்குள் பாய்ந்து சென்று தாக்கும் ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த இரு தொழில் நுட்பங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2 அறிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு பிராந்திய அளவில் ஏற்படும் மிரட்டலை சமாளிக்கவும் ஆயுத பலத்தை அதிகரிக்கவும் இந்த ஆயுதங்கள் உதவும். ஹார்பூன் ஏவுகணைகளை போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. டார்பிடோக்களை ரேய்தியான் என்ற நிறுவனம் சப்ளை செய்கிறது என கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கியது. இதற்கு கைமாறாக தளவாட விற்பனை ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.