கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் காலத்தில் மாநில எல்லையைக் கடக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது
‘இது தெரிந்தது தானே? இதில் என்ன புதியதைக் கண்டீர்கள்’ என எதிர்கேள்வி எழுப்பினால் ‘வந்ததய்யா நோன்புப் பெருநாள் காலம்’ என மறுபக்கம் ஒரு குரல் கேட்கும்,
நோன்புப் பெருநாள் காலத்தில் மாநில எல்லைகளைத் தாண்டக்கூடாது என்றால் அப்புறம் எப்படி நாங்கள் எங்கள் கிராமங்களுக்குப் போவது? பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் நோன்புப் பெருநாளை எப்படிக் கொண்டாடுவது என்பது பெருநாளுக்காக ஆவலாகக் காத்திருப்போர் மத்தியில் எழும் தவிப்பு,
காலம் அனைவரையும் காக்க வேண்டும், அதற்காகவாவது நாம் நமது கொண்டாட்ட நிகழ்வுகளை கட்டுகோப்புடன் நடத்திக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது,
அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பு தப்பாகாது,
அனைவரையும் கொரோனா வைரசிலிருந்து காக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது. இன்று நாம் இறங்கிப் போனால் இனி வரும் காலப் பொழுது முழுவதும் நிம்மதியாக உறங்கலாம் என்பதற்காகத்தான் மாநிலங்களைக் கடக்க வேண்டாம் என்ற உத்தரவு வருகிறது,
பாலேக் கம்போங் என்பது எங்களின் கலாச்சாரம்
காலங்காலமாக கடைபிடித்து வந்ததை எப்படி குறைத்துக் கொள்வது என்ற கேள்வி ஒரு பக்க வாதம்,,,,
குறைத்துக் கொண்டால்தான் அடுத்த கட்ட நிறைவுக்கு நாம் செல்ல முடியும் என்பது மறுபக்க நியாயம்
கணவர் ஒரு மாநிலத்தில் இருந்து மனைவி இன்னொரு மாநிலத்தில் இருந்தால் இவர்களுக்கு தளர்வு உண்டு. இவர்கள் வேண்டுமானால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம். இந்த ஒரு காரணத்தைத் தவிர இதர எந்த காரணத்தையும் முன்னிட்டு மாநிலத்தை கடப்பது கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு,
ஏன்? என்ன காரணம்?
மாநிலத்தைக் கடக்க நேர்ந்தால் சொந்த ஊருக்குப் போகலாம். அங்கே போனதும் மூதாதையர் கல்லறை சடங்கை நடத்த வேண்டும், இதற்காகவே மையத்துக் கொள்ளைக்குச் செல்ல வேண்டும், அதிகமான மக்கள் அங்கு கூடிவிட்டால் அதுவே ஆபத்தில் முடியும், அழைப்பார் இல்லாமல் கொரோனா பாயும், உடல் விட்டு உடலுக்குச் சென்று ஊழ்வினையும் நடத்தும்,
கூட்டத்தை பார்த்து தாக்குவதும் பின்தொடர்வதும்தானே கொரேனாவின் நியதி.
இந்த நியதியை உடைத்து விட வேண்டும் என்றுதான் அரசாங்கம் போராடி வருகிறது, அதற்காகவே மாநில எல்லை மீறல் வேண்டாம் எனவும் உத்தரவு போடுகிறது.
எனவே, சுடிர்மானின் பிரபலமான பாலேக் கம்போங் பாடலை செவிகளில் மட்டுமே ஏற்றிக் கொண்டு செயல்பாட்டில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறியுள்ளதை மலாய்க்காரர்களும் இதர மலேசியர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவோம்.