நிபுணத்துவம் சிதைகிறது

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையின்  கீழ் பேரங்காடிகளிளும் உணவகங்களிலும் தங்கள் விபரங்களைத் தரவேண்டும் என்ற கடப்பாடு இருக்கிறது. கூடுதலாக தங்களின் விவரங்களுடன் தொலைபேசி எண்களையும் தரவேண்டும் என்றிருக்கிறது.

அரசின் பார்வைக்கு இது தேவையான ஒன்றுதான். ஆனால், இந்தப்பதிவுகள் ஆபத்தானது என்கிறார் ஓய்வு பெற்ற ஒரு வழக்கறிஞர். அவர் கூறுவதிலும் ஓர் உண்மை இருக்கிறது என்பதை மறுக்கவும் முடியாது.

சில கபடதாரிகளின் கையில் தொலைபேசி எண்கள் கிடைத்துவிடுகின்றன. அந்த எண்ணுக்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என்று அறியப்பட்டிருக்கிறது. இதுபோலவே வங்கிகளில் பெறப்படும் விவரங்களால் பலரின் விவரங்கள் வன்மத்திற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

வங்கிகளில் பெறப்படும் விவரங்கள் எப்படி எதிரிகளின் கைகளுக்குக்கிடைக்கின்றன என்பதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. வாடிக்கையாளரிடம் குறியீட்டு விபரங்களைப் பெற்ற சில மணி நேரத்தில் கள்ளப் பேர்வழிகளின் கவனத்திற்கு மாற்றப்படுகிறதென்பது ஏற்றுக் கொள்ளமுடியாததாக இருக்கிறது.

வங்கிக்கும் கள்ளப்பதிவாளர்களுக்கும் தொடர்பு இருக்கவேண்டும், அல்லது, வங்கியின் தொழில்நுட்பம் வங்கிக்குத் தெரியாமல் திசைமாற்றம் செய்யப்படுவதாய் இருக்க வேண்டும். அப்படியும் இல்லையென்றால் வங்கிப் பணியாளர்கள் விலை பேசப்பட்டிருக்க வேண்டும். இதில், வங்கியின் மீது நம்பகத்தன்மை முக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருக்கிறதா?

தனிப்பட்ட ஒருவரின் விபரத்தை எவ்வித முன்னறிவிப்புமில்லாமல் பயன்படுத்துவதும் அதைவைத்தே அவரை அச்சுறுத்துவதும்  குற்றப்பதிவாகும். இதைத் தடுக்காவிட்டால் விபரீதமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உணவகங்களிலும், பேரங்காடிகளிலும் பெயர்பதிப்பது தவறல்ல. அவர்களின் தொலைபேசி எண்களைப் பதிவிடுவது ஆபத்தானது என்று உணரப்படுவதால், மின்னியல் தொழில் நுட்பத்தில்  புதிய முறை கையாளப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றனர்.

மின்னியல் கையாடல்களில் நூதன முறைகேடுகள் வலுத்துவருகின்றன என்பதை சைபர் கிரைம் உணரவேண்டும். புதிய புதிய தொழிநுட்பத்திற்கு மாற்றம் செய்துகொண்டே இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீடுகள் காப்பாற்றப்படவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here