கோலாலம்பூர் ஜாலான் அலோரில் உள்ள இரு கடைகளில் கோவிட் 19 நோய் தொற்றுக்கான சோதனை சான்றிதழை போலியாக தயாரித்த குற்றத்திற்காக இரு வங்காளதேச ஆடவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மடிக் கணினி, நகல் அச்சு இயந்திரம், கோவிட் 19 பரிசோதனையின் போலியான சான்றிதழ், 1,331 வெள்ளி ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததாக கோலாலம்பூர் காவல் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாசிம் தெரிவித்தார்.
உலகை உலுக்கி வரும் கோவிட் 19 நோய் தொற்று தொடர்பில் அந்நிய பிரஜைகளுக்கு இத்தொற்று இல்லை எனும் போலியான சான்றிதழ்களை இவர்கள் தயாரித்து வந்துள்ளனர்.
ஒரு சான்றிதழுக்கு 50 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 600 வெள்ளிக்கு கடையை வாடகைக்கு எடுத்து இச்செயலில் இவர்கள் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
மேலும், இந்த இரு வங்காளதேசிகளும் மலாய்க்காரர்கள் இருவரிடம் வேலை செய்வதையும் ஒருவருக்கு 1,500 மற்றொருவருக்கு 1,700 வெள்ளி என சம்பளம் வழங்கப்படுவதையும் விசாரணையின் மூலம் போலீஸார் கண்டுப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேல் விசாரணைக்காக டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
கோவிட் 19 உயிர் கொல்லி நோயாகும். அதற்கு போலியான சான்றிதழ்கள் தயாரிப்பது பெரும் குற்றமாகும். யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று டத்தோஸ்ரீ மஸ்லான் அறிவுறுத்தினார்.