பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த ஒரு அந்நிய பிரஜைகளை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
நேற்று காலை கோத்தா டாமான்சாரா தி ஸ்திராண்ட் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக் குறிய வகையில் இருந்த ஒரு காரை மடக்கினர். அதில் 4 அந்நிய பிரஜைகள் இருந்துள்ளனர். அவர்களை போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்த போது காரை வேகமாக செலுத்தி தப்பிக்க முயன்றுள்ளனர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி நிக் எஸானி பின் முகமட் பைசல் கூறினார்.
இதனால் போலீஸார் காரின் டயர் பகுதியிலும் பின் புறத்திலும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போதும் காரை நிறுத்தாமல் அவர்கள் தப்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் இருந்த அதிகாரிகள் அக்காரை தொடர்ந்து விரட்டினர்.
கோத்தா டாமான்சாரா பெர்சியாரான் சூரியா வட்டாரம் வரை சென்ற அக்காரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அதில் இருவர் தப்பித்து ஓடி விட்டனர். மற்ற இருவரை போலீஸார் பிடித்தனர். சிக்கிய இருவரும் போலீஸாரிடம் மோசமாக நடந்து கொண்டனர். இருந்தாலும் போலீஸார் அவர்களை கைது செய்தனர் என்று அவர் கூறினார்.
பிடிப்பட்டவர்களில் ஒருவரை அவரின் வீட்டிற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அமெரிக்க கடப்பிதழ், அனைத்துலக வாகனம் ஓட்டும் உரிமம், விலை உயர்ந்த கை கடிக்காரம், வார்பட்டை போன்ற பல பொருட்கள் அவ்வீட்டில் இருந்துள்ளன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.