சிலாங்கூர் மாநிலம் வழக்க நிலைக்கு மாறி வருகிறது என்பதற்கு அடையாளமாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி ஓர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
காலைச்சந்தை, இரவுசந்தை, ஈரச்சந்தை அனைத்தும் ஜூன் 15 ஆம் நாள் வழக்க நிலைக்குத் திரும்பும் என்ற செய்தி பலருக்குப் பால் வார்த்திருக்கிறது. வழக்கநிலைக்கு மணி அடித்திருப்பதால் இனி வழக்கம்போல் சந்தைகள் சூடு பிடிக்கத்தொடங்குவிடும்.
மக்கள் சுறுசுறுப்பாக நடமாடத்தொடங்கிவிடுவார்கள். மக்களின் சுறுசுறுப்பு ஒருபக்கம் இருக்கும்போதே அன்றாட நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைகள் கவனத்தில் இருக்கவேண்டும் என்பதற்கும் அவர் மணி அடித்திருக்கிறார்.
மக்களின் நன்மைக்காக திறக்கப்பட்டிருக்கும் பூட்டுகள் பாதுகாப்பாகத் திறக்கப் படவேண்டும் என்பதற்காகவே நடமாட்ட கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் இருக்கின்றன.
எதிரியான கொரோனா இன்னும் பின்தொடர்கிறது. ஆபத்து இன்னும் எதிரே இருக்கிறது. ஆனாலும் அந்த எதிரியால் நெருங்க முடியவில்லை. மக்களின் கூடல் இடைவெளி அதைத்தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது.
நடமாட்ட கட்டுப்பாடுகளில் ஏமாறும்போது கொரோனா பாயும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் குரல்கொடுத்திருக்றார்.
பாதுகாப்பற்ற கட்டடங்கள் வணிகங்களுக்கு அனுமதி இருக்காது. வணிகத்தளங்களுக்குள் நுழையும் முன் விதிகளைப்பின்பற்ற வேண்டும் என்பது அவரின் செய்தியாக இருக்கிறது. விதிகளைப் பின்பற்றும் மக்களே பாதுகாப்பாக இருக்க முடியும்.