மீட்சியுறும் நடமாட்டக் காட்டுப்பாட்டு ஆணையின் கீழ் பல்வேறு தொழில்துறைகள் தொடங்கப்பட்டிருந்தாலும் இன்னும் சில துறைகள் முடங்கியே கிடக்கின்றன. உடற்பேறு குறைந்தவர்கள் குறிப்பாக பார்வையற்றோர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
உடற்பேறு குறைந்தவர்களில் பெரும்பாலானோர் தொடுதல் முறையிலான வேலையில் தான் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கை, கால்களுக்கு மசாஜ் செய்வது. கோவிட் 19 தாக்கத்தினால் இது போன்ற துறைகள் இன்னும் செயல்படாமல் இருக்கின்றன என்று கெராக்கான் கட்சியின் ஒருமைப்பாட்டு குழுத் தலைவர் புவநீதன் இளங்கோவன் கூறினார்.
மீட்சியுறும் ஆணையில் அரசாங்கம் பல்வேறு தளர்வுகளுடன் தொழில்துறைகளுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இக்கால கட்டத்தில் வருமானம் இன்றி தவிக்கும் உடற்பேறு குறைந்தவர்கள், பார்வையற்றோர்களின் தொழில்களுக்கு எஸ்ஓபி விதித்து சில ஏற்பாடுகளை செய்யலாம் என அவர் பரிந்துரைத்தார்.
அதுமட்டுமின்றி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும். அவர்களின் பிழைப்பிற்கான ஊதியத்தை எப்படி ஈட்டுவது குறித்த ஆலோசனைகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று புவநீதன் கேட்டு கொண்டார்.
இதனிடையே கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் பார்வையற்றோர்கள் சிலருக்கு புவநீதன் தலைமையில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.