பாரிஸ்:
கொரோனா வைரசின் தாக்கதால் பிரான்ஸ் அரசு பெரும் பொருளாதார பாதிப்பை அடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்திருந்தார்.
அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்தார். எட்வர்ட் பிலிப் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அதிபர் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் ஹஸ்டெக்சை நியமனம் செய்துள்ளார்.
பிரதமராக பதவி வகித்த எட்வர்ட் அதிபர் இம்மானுவேலை விட அதிக மக்கள் செல்வாக்கு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் தனது செல்வாக்கை அதிகரிக்க அதிபர் இம்மானுவேல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்து அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.