புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுக முகத்துவாரங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், குமரி மாவட்டம் குளச்சல் தேங்காய்துறை பட்டினம் துறைமுகத்தில் தொடர் போராட்டத்தின்போது இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்காரவேலர் முன்னேற்ற கழகம் சார்பில் வீராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமை தாங்கினார். தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியானந்தம் வரவேற்றார். துணைச் செயலாளர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் வீரசேகர் நன்றி கூறினார்.