சத்தீஸ்கர் மாநிலத்தில் குத்தாகத் என்ற அணை உள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் அணையில் இருந்து உடனடியாக திறந்து விடப்பட்டது. வெள்ளம் சீறிப்பாய்ந்த நிலையில், ஆற்றின் அருகில் நின்றிருந்த ஜிதேந்த்ர காஷ்யப் என்பவர் சற்றென்று அருகில் இருந்து சுவர் மீது ஏறிக்கொண்டார். தண்ணீர் அதகரிக்க அருகில் உள்ள மரத்தை பிடித்துக் கொண்டு அப்படியே நின்று விட்டார்.
தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்புப்குழு சம்பவ இடத்திற்கு வந்தது. இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் அந்த நபர் மரத்தை பிடித்துக் கொண்டபடியே இரவு முழுவதும் தவித்துக் கொண்டிருந்தார்.
அதன்பின் விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டது. இன்று காலை ராய்ப்பூரில் இருந்து வந்த எம்.ஐ.–17 ஹெலிகாப்டர் 5.49 மணியளவில் மீட்புப்பணியில் ஈடுபட்டு 6.37 மணிக்கு அவரை மீட்டது.
பின்னர் அந்த நபர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து ஆபத்து ஏதும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.