பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் -பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருந்து வருகிறார். அவர் அதிபராக பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் தனது மனைவியின் மீதான ஊழல் புகார் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையில், ஜெயீர் போல்சனாரோவின் மனைவி, மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது குறித்து குளோபோ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் பிரேசிலியாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

குளோபோ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பிரேசில் அதிபரிடம் அவரது மனைவியின் வங்கிக்கணக்குகள் குறித்த விவரத்தை கேள்வியாகக் கேட்டார். இதனால் கோபம் அடைந்த ஜெயீர் போல்சனாரோ, “உங்கள் முகத்தில் குத்த விரும்புகிறேன். அது சரிதானே?” என்று கேட்டார். இதற்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, ஜெயீர் போல்சனாரோ பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here