உத்தர பிரதேச மாநிலம் பாலியா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரத்தன் சிங். இவர் தனியார் சேனல்களுக்கு செய்திகள் வழங்கி வந்தார்.
இவரது வீடு கிராமத்தில் உள்ளது. என்றாலும் நகரத்தில் வசித்து வந்துள்ளார். கிராமத்தில் வசித்து வரும் ரத்தன் சிங் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் இவர் வீட்டையொட்டி சுவர் எழுப்பியதாக தெரிகிறது.
பக்கத்து வீட்டுக்காரரிடம் இதுகுறித்து கேட்க நேற்றிரவு கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் இவரது வீட்டையொட்டி எழுப்பிய சுவரை ரத்தன் சிங் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரத்தன் சிங் துப்பாக்கியால் சுடப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.