கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் (RIBI) பராமரிப்புப் பணிகளுக்காக, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகாலத் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரிங்கிட் நிதியை வீடு அமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு ஒதுக்கியுள்ளது.
குளுவாங்கில் நடைபெற்ற ஜொகூர் மாநில வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி வழங்கும் விழாவில் கலந்துகொண்ட வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், தேவாலயங்கள், குருத்வாராக்கள், இந்து ஆலயங்கள் மற்றும் சங்க வளாகங்களின் மேம்பாட்டுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
‘மடானி’ (Madani) அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு சமுதாயமும் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், இந்த ஆண்டு ஜொகூர் மாநிலத்தில் உள்ள 27 வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் 3.14 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 279 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 1,478 விண்ணப்பங்கள் மின்-ரிபி (e-RIBI) அகப்பக்கம் வழி பெறப்பட்டுள்ள வேளையில், இந்த நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கத் தனது அமைச்சு தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றும் அமைச்சர் ஙா கோர் மிங் உறுதிப்படுத்தியுள்ளார்.




















