டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
நமது நாட்டில் தற்போது 3 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் இருக்கின்றன.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து இந்தியாவில் வினியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனையில் உள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிந்துள்ளது. 375 தனிநபர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையை தொடங்க உள்ளது.
மூன்றாவது தடுப்பூசியை ஜைடஸ் கேடிலா மருந்து நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம், மனிதர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனையை முடித்துள்ளது. 45-50 பேருக்கு முதல் கட்டமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட சோதனையை இந்த நிறுவனம் அடுத்து நடத்த உள்ளது.
பல்வேறு கட்ட பரிசோதனைகளில் தடுப்பபூசிகள் இருப்பதை புரிந்து கொள்வது அவசியம். இதன்கீழ் தன்னார்வலர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டு இரண்டாவது டோஸ் 14 அல்லது 28 நாளுக்கு பின்னர் போடப்படும். குறைந்தபட்சம் 2 அல்லது 4 வாரம் கழித்து அவர்கள் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருக்கிறதா என்பதை சோதித்து அறிய வேண்டியதிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.