ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் பர்வான், வார்டக் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதிகாலை என்பதால் மக்கள் தங்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளம் காரணமாக பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக 100-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தேவையான மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கான் தெரிவித்துள்ளார்.