சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 7ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் செல்லும் வழித்தடங்களில் நேற்று(8.09.2020) முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
மெட்ரோ ரயிலில் பயணிக்கு பயணிகள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மெட்ரோ ரயில் சேவை, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
தற்போது, கொரோனா அச்சத்தால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் வருகை குறைவாக இருக்கிறது எனவும் வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.