உயர் மின்அழுத்தக் கம்பியால் தூக்கி வீசப்பட்ட 16 வயது சிறுவன், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் 36 மணி நேரத்திற்கு பின் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
டெல்லியில் பெய்த கனமழையால் தண்டவாளம் அருகே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் மிதித்து விட்ட சிறுவன் ஒருவம், அசைவற்று விழுந்து விட்டான். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அந்த கம்பி வழித்தடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மின்தாக்குதலால் சிறுவனின் இதயத்துடிப்பு நின்றிருந்தது. இதையடுத்து சிறுவனை உயிர்பிழைக்க வைக்கும் முயற்சியில் மருத்துவர் குழு ஈடுபட்டது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால், 36 மணி நேரத்திற்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது. தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விரைவாக செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதனிடையே மீண்டும் சுயநினைவைப் பெற்றிருந்தாலும், சிறுவனது மூளை செயல்பாடுகள், நினைவாற்றல் உள்ளிட்டவை மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.








