
கோலாலம்பூர்:
மலாக்கா, ஆயர் கெரோவில் நடைபெற்ற 2026 PKR தேசிய காங்கிரஸின் நிறைவு உரையில், கடந்த 30 ஆண்டுகளாக PKR முன்னெடுத்து வரும் சீர்திருத்தப் போராட்டம் (Reformasi) தற்போது அதன் “இறுதி அலைக்குள்” நுழைகிறது. வெறும் எதிர்ப்புக் கட்சியாக மட்டுமே இல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கட்சி முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று, PKR கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி வலியுறுத்தினார்.
1998-ஆம் ஆண்டிலிருந்து கோரப்பட்டு வரும் ஜனநாயக சீர்திருத்தங்கள், மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றை முழுமையாக அடைவதே தற்போதைய முக்கிய இலக்காகும். இதன் ஒரு பகுதியாகவே பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் 1971 (AUKU) நீக்கப்படும் முயற்சிகள் தொடர்கின்றன என்றார்.
PKR கட்சி மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கிறிஸ்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பல்லின இயக்கமாகும்.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் நலனை மட்டும் முன்னிறுத்தும் குறுகிய அரசியலில் PKR சிக்கிவிடக் கூடாது. அது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தியப் பள்ளிகளுக்கு உதவி அறிவித்தால் மலாய்க்காரர்களும், மலாய்க்காரர்களுக்கு அறிவித்தால் பிற சமூகத்தினரும் கேள்வி எழுப்பும் சூழல் உள்ளது. இதனால் பொதுமக்களின் உணர்வுகளையும் அரசியல் போட்டிகளையும் கடந்து, அனைத்து மலேசியர்களுக்கான நீதியை வழங்குவதில் கட்சி சமநிலையைப் பேண வேண்டும்.
இன எல்லைகளை வலுப்படுத்தும் அரசியலைத் தவிர்த்து, சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளமாக இருக்கும் வகையில் ஒற்றுமை அரசியலை PKR தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.























