விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். “தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் சிலர் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்குகளின் கூண்டில் நுழைகின்றனர்.இதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் மனுவில் கோரியுள்ளார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த மனுவின் மூலம் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமா, இல்லையா என்ற பிரச்சினை எழுப்பப்படுகிறது. இந்திய தண்டனை சட்டம், பிரிவு 309-ன் படி தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அதே நேரம் மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், பிரிவு 115-ன்படி, மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்வோருக்கு தண்டனை வழங்கக் கூடாது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.