கேரளாவைச் சேர்ந்த, 90 வயது மூதாட்டி, ‘லேப்டாப்’ எனப்படும் மடிக்கணினியை பயன்படுத்தக் கற்று, தினமும், அதில் செய்திகளை படித்து வருகிறார். கடந்த, 1930ல் பிறந்த, மேரி தாமசுக்கு, தினமும் காலையில் நாளிதழ் படித்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதில் விருப்பம் அதிகம். ஆனால், அவர் ஆர்வத்திற்கு, கொரோனா வடிவில் தடை ஏற்பட்டது.
நாளிதழ் மூலமாகவும் கொரோனா பரவும் என்ற தவறான கருத்து காரணமாக, அதை வாங்குவதை மேரி தாமஸ் குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர். இதனால், செய்திகளை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தார், மேரி தாமஸ். அவரது கவலையை போக்க, பேரன், அருண் தாமஸ் முன்வந்தார். அவர், லேப்டாப்பை பயன்படுத்தும் முறை குறித்து பாட்டிக்கு கற்றுக் கொடுத்தார்.
ஒரே மாதத்தில் லேப்டாப்பை எப்படி இயக்குவது என, அறிந்த பாட்டி, இணைய வசதி மூலம் ‘இ – பேப்பர்’ எனப்படும் மின்னணு செய்தித்தாள்களை படிக்கத் துவங்கி உள்ளார். கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால், வயது ஒரு தடையில்லை என்பது, மேரி தாமஸ் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.