கொவிட் மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், நாட்டின் உயிரிழப்பு வீதம் 1.5% ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால், நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2218 பிரத்யேக கொவிட் மருத்துவமனைகள், தரமான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகின்றன.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக, ஐசியு மருத்துவர்களின் திறனை மேம்படுத்த, இ-ஐசியு என்ற தனிச்சிறப்பான தொலைதூர வீடியோ ஆலோசனையை தில்லி எய்ம்ஸ் நிபுணர்கள் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்குகின்றனர். இந்த ஆலோசனை, கடந்த ஜூலை 8ம் தேதி தொடங்கியது.
இதுவரை, 25 தொலை தூர ஆலோசனை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 393 மருத்துவமனைகள், இந்த இ-ஐசியு தொலை தூர மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளன.
ஐசியு மேலாண்மை திறனை மேலும் அதிகரிக்க, கேள்வி பதில் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இதற்கான கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும்.
கடந்த 24 மணி நேரத்தில் 59,105 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். 45,148 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்துள்ளது(71,37,228). தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், குணமடைவோர் வீதமும், 90.23% ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, மொத்த பாதிப்பில் 8.26% ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,53,717 ஆக உள்ளது.









