‘தற்போது அமலில் உள்ள விதிமுறைகளுடன், நவ., 30 வரை, கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25ல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது; பின், ஐந்து கட்டமாக, பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, செப்., 30ல், ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.அக்., 31 வரை, இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டது.
தற்போது, அதே தளர்வுகள் மற்றும் விதிமுறைகளுடன், நவ., 30 வரை, ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே, பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இதற்காக, ‘இ – பாஸ்’ பெற தேவையில்லை.முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உட்பட, கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும், மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கோரிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட வழித்தடங்களில், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.