லடாக்கை, சீனாவின் பகுதியாக காட்டியதற்காக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் மன்னிப்பு கேட்டுள்ளது.டுவிட்டர் நிறுவனத்தின், ‘ஜியோ டெக்’ பதிவில், நம் நாட்டின் லடாக் யூனியன் பிரதேசம், அண்டை நாடான, சீனாவின் பகுதியாக, கடந்த, 18ம் தேதி காட்டப்பட்டது. இதற்கு, மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது பற்றி டுவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டோர்சிக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியிருந்தார்.
அதில் கூறப்பட்டதாவது:விசாரணையூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். லடாக்கின் தலைநகராக லே உள்ளது. ஆனால், லடாக்கை, சீனாவின் பகுதியாக நீங்கள் காட்டியது பெரும் தவறு. இவ்வாறு, அதில் அவர் எழுதியிருந்தார். மேலும், இது பற்றி பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தியது. இதையடுத்து, பார்லி., கூட்டுக்குழு முன், டுவிட்டர் அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இதன்பின், மீனாட்சி லேகி கூறியதாவது: லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக காட்டிய விவகாரத்தில், டுவிட்டரின் விளக்கம் போதுமானதாக இல்லை.
இதற்கு எழுத்து பூர்வமாக, டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என, பார்லி., கூட்டுக்குழு வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.தொழில்நுட்ப கோளாறுஇந்நிலையில், டுவிட்டர் நிறுவனம், வாய்மொழியாக மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றி டுவிட்டர் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த தவறு நடந்துள்ளது. அதற்காக, டுவிட்டர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது’ என்றார்.