காதலன் வருவான் என்று இரவு காத்த கிளியான மணப்பெண்

சென்னையில் இருந்து வருவதாக வாக்குறுதி அளித்த காதலன் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஊட்டியில் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திய மணமகள் நாள் முழுக்க காத்திருந்தும் காதலன் வராத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள மட்டகண்டி கிராமத்தில் நடக்க இருந்த திருமணத்தை, மணமேடையில்…, தாலிகட்டும் நேரத்தில்…, மணமகனை தடுத்து தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென போர்க்கொடி உயர்த்தி திருமணத்தை நிறுத்தியவர் மணப்பெண் பிரியதர்சினி..!

ஊரார் சுற்று போட்டாலும்…தாயார் அடிக்க பாய்ந்தாலும்… அஞ்சாமல் தன்னை தேடி தனது காதலர் இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வருவார் என்று கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி காதலனையாவது கரம் பிடித்தாரா ? என்பது பலரது கேள்வியாக இருந்தது.

மணமகளின் கலாட்டாவால் கல்யாணம் நிறுத்தப்பட்டது கடந்த 29ந்தேதி…! அன்று முழுவதும் பிரியதர்ஷனி இலவுகாத்த கிளியாக காத்திருந்தும் கடைசிவரை அவரது சென்னை காதலன் அங்கு வரவில்லை… இதையடுத்து தங்களது மகளை காரில் அழைத்துச்சென்ற மணமகளின் பெற்றோர் அவரை லவ்டேல் என்று அழைக்கப்படும் சுற்றுலா பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு, இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று எச்சரித்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

திருமணத்துக்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக வாக்குறுதி அளித்த காதலன் டாடா காட்டிய நிலையில் காதலனை தேடிச்சென்று கரம் பிடிப்பது என்ற லட்சியத்துடன் அந்தப் பெண் சென்னைக்கு புறப்பட்டதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே திருமணத்தை நிறுத்திய தங்களது மகளால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக மனம் நொந்த பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் மணப்பெண் பியதர்ஷினி காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், முறைப்படி மனைவியை விவாகரத்து செய்து கொண்டால் மட்டுமே பியதர்ஷினியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளமுடியும் என்பதால் காதலனுக்காக இலவு காத்த கிளியாக பட்டணத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி..! என்கின்றனர் அவரது உறவினர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here