மீனம்பாக்கம் துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திவந்த ஆசாமியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் மீட்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 119 பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது (44) மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவரது உள்ளாடைக்குள் மறைத்து 201 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.10.33 லட்சம். இதையடுத்து, சாகுல்ஹமீதை கைது செய்து விசாரிக்கின்றனர்.