புக்கிட் ரோத்தான் ஶ்ரீ சக்தி தேவஸ்தானத்தின் பிரதான பாதையில் வழிகாட்டி அறிவிப்பு பலகையைக் கொண்டு மூடப்பட்டு, புதிய பாதையை அமைத்து தந்துள்ளது ஆலய நிர்வாகத்திற்கு உடன்பாடில்லை என்று ஆலயத்தலைவர் சிவஶ்ரீ முத்துகுமார சிவச்சாரியார் கூறினார். ஏனெனில் புதிய பாதை பக்தர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது.
தற்பொழுது நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத்தில் புக்கிட் ரோத்தான் வட்டார மக்கள் அதிக சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக பல பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இது குறித்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜேகேஆர் இலாகாவிற்கு கடிதம் எழுதினோம். அதில் மேம்பாலம், ஆலயத்தின் முன் 4 வழி பிரதான சாலை அமைத்தல் ஆகியவை குறித்து வலியுறுத்தி இருந்தோம். ஜேகேஆர் எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
அதனை தொடர்ந்து கடந்த 22.11.2020 அங்குள்ள இதர சமய வழிபாட்டு தளங்களை சேர்ந்த முக்கியதஸ்கர்களுடன் கூட்டம் நடத்தினோம். இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் அரசாங்கத்திற்கு கொண்டு செல்ல ஒரு குழுவை அமைத்துள்ளோம்.
சாலை விரிவாக்க திட்டத்தால் ஆலயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மட்டுமல்லாமல் வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவச்சாரியார் தெரிவித்தார்.
இவ்வேளையில் ஆலய விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்