லண்டன்-
கொரோனா வைரஸ் பரவல் துவங்கி, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 90 வயது மார்க்கரெட் கென்னானுக்கு, உலகின் முதல் தடுப்பூசி அளிக்கப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி தம்பதிக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு இறுதியில், சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.
‘மருந்தோ, தடுப்பூசியோ இல்லாததால், தொடர்ந்து அதன் தாக்கம், உலகின் பல நாடுகளில் இன்றும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘பைசர்’ மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்த, பிரிட்டன் பஹ்ரைன் நாடுகள் அனுமதி அளித்துள்ளன.
அதன்படி, உலகிலேயே முதல் முறையாக, பிரிட்டனில் இந்த தடுப்பூசி அளிக்கும் பணி துவங்கி உள்ளது. தேசிய சுகாதார சேவை துறை சார்பில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பிரிட்டனின் மத்திய பகுதியில் உள்ள கோவன்ட்ரியில், பல்கலை மருத்துவமனையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி, 90 வயதாகும், மார்க்கரெட் கென்னானுக்கு அளிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையை சேர்ந்த, மே பார்சன்ஸ் என்ற நர்ஸ்,இந்த தடுப்பூசியை செலுத்தினார். மகன், மகள், நான்கு பேரக் குழந்தைகள் உள்ள கென்னான், மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்.
”இத்தனை நாளாக பயந்து பயந்து வாழ்ந்து வந்தேன். வரும் புத்தாண்டை, குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடுவேன். உலகிலேயே முதல் தடுப்பூசியை பெறுவதில் பெருமைபடுகிறேன்,” என, அவர் கூறியுள்ளார்.