வாஷிங்டன்-
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனவரி 20- ஆம்தேதி பதவி ஏற்க உள்ள ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
டெலவாரே மாகாணத்தில் மத்திய அரசு வக்கீல்கள் இந்த விசாரணையை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி ஹண்டர் பிடன் கூறும்போது, “இதை நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால், நான் வரி விவகாரங்களைச் சரியான முறையில், சட்டரீதியில் கையாண்டு இருப்பதை இந்த விசாரணை காண்பிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விசாரணை பற்றி தனக்கு செவ்வாய்க்கிழமை தெரிய வந்துள்ளதாகவும் ஹண்டர் பிடன் தெரிவித்தார்.
ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது, ஹண்டர் பிடன் உக்ரைன், சீனாவில் தனது வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். இது தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் பேசுபொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தமாதம் ஜோ பிடன் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறவரையில் இந்த விசாரணை நீண்டால், இந்த விசாரணையை புதிய அட்டார்னி ஜெனரல் மேற்பார்வையிடும் நிலை உருவாகும் என்றும் பேசப்படுகிறது.