சென்னை-
தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில், “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாகக் கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் அந்த கட்சியைப் பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.
ஆனால், அந்த கட்சியை நடிகர் ரஜினிகாந்த்தான் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” ஒதுக்கப்பட்டது ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட கட்சியை மேற்கோள் காட்டி வெளியான செய்தி குறித்து, ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.