மாட்ரிட்-
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. உருமாறிய கொரோனா முதன்முதலில் இங்கிலாந்து நாட்டில் உறுதி செய்யப்பட்டது.
இந்த புதியவகை உருமாறிய கொரோனா பழைய கொரோனாவை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், மிகுந்த அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. உருமாறிய வைரஸ் 1 நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து பல நாடுகளில் புதியவகை கொரோனா பரவி வருவதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்திருகின்றனர்.