ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவில் பிறக்க உள்ளதை தொடர்ந்து மதுரை நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கொரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால் நகரில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட யாருக்கும் அனுமதியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நட்சத்திர விடுதிகள், சாதாரண விடுதிகளில் நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. இருசக்கர வாகனங்களில் குழுவாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு, வாகன பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும். நகர எல்லைக்குள் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட எவ்வித தடையுமில்லை. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கடைபிடிக்க வேண்டும்.
நகர் முழுவதும் இன்று இரவு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், உயர் அதிகாரிகள் அனைவரும் பணியில் இருப்பார்கள். இரவு 9 மணிக்கு மேல் கும்பலாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அது தவிர பொது இடங்களில் கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்தாண்டு புத்தாண்டு தொடக்கம் விபத்தில்லா புத்தாண்டு தொடக்கமாக இருக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.