பெரியகுளம்-
சாதனை நிகழ்வுக்காக பெரியகுளத்தில் 200 மாணவர்கள் அரை மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி அசத்தினர். தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘நோபல் வேர்ல்டு ரெக்கார்டு’ புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, வேலன் வாழும் கலைக்கூட அறக்கட்டளை சிலம்பாட்ட பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200 பேர் 30 நிமிடம் தொடர்ச்சியாக இரட்டை சிலம்பம் சுற்றி அசத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிறப்பு) தியாகராஜன் கலந்து கொண்டு அனைத்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக பரத நாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சிலம்ப பயிற்சியாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் சுந்தரவடிவேலன் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.