ஒரு வாசகம் மணி வாசகம்
(mind your step)
கோலாலம்பூரில் சில பகுதிகளில் இது போன்ற வாசகங்களைப் பார்த்தவர்கள் இருப்பார்கள்.
கட்டடங்களின் படிகளில், அல்லது கழிப்பறைப் பகுதிகளில் இது போன்று வாசகங்கள் இருக்கும். பாதுகாப்பு கருதி அறிவுறுத்தும் வாசகம் இது என்றாலும் இதில் சிந்திக்க வைக்கும் செய்திகளும் இருக்கின்றன.
காலில் முள் தைக்கும்போதுதான் செருப்பின் அருமை புரியும். அதுவரை செருப்பு சிறப்பான பணியைச் செய்கிறது என்பது மறந்து போனதாகவே இருக்கும்.
முள் தைக்கும்போதுதான் நம் கவனக்குறைவு புலப்படும், அறியாமை தெளிவுறும். கவனக்குறைவால் ஏற்படும் தவற்றினால் தொல்லைகளும் அதிகரித்துவிடும் . அதனால் இழப்புகளும் அதிகம்.
ஆனாலும், வழுக்கி விழுந்துவிடுகிறோம். விழுந்தபின்தான் அறியாமை தெரிகிறது. இவற்றை நிதானித்திருந்தால் இழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே!
பாதைகள் கரடுமுரடானவை. பாதைகள் நமக்கானதாக அமையாது. அதைத்தொற்றியே பாதுகாப்பாக நாம் ந்டையை மாற்றிக்கொள்ளவேண்டும். அடுத்த அடி நமக்கானதாக இருக்க நாம்தான் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் முதல் அடியிலிருந்துதான் கணக்கிடப்படுகிறது. அதனால்தான், MIND YOUR STEP என்கிறார்கள்.
இதற்காகவே இவ்வாசகத்தை கட்டடப்பகுதிகளில் அனைவருக்கும் புரியம் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதி வைதிருக்கிறார்கள் போலும் .
வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதை திருக்குளாய் இவ்வாசகம் உணர்த்துகின்றது.
சுருங்கச் சொல்லப்பட்டிருப்பதாகக் கருதினாலும் இவ்வார்த்தைக்குள் நிறைந்திருக்கும் பொருள் மிக முக்கியமானதாகவே இருக்கின்றது. இதன் ஆழம் தேடலில் விரிந்துகொண்டே போகும்.
தேடலின் தீவிரத்தில் இவ்வார்த்தையின் அர்த்தம் மிகப்பெரிய தத்துவங்களை உணர்த்திவிடும்.
வாழ்க்கைத் துணையாக இருக்கட்டும். நட்பு வட்டமாக இருக்கட்டும் , வேலையாக இருக்கட்டும், அடுத்த வேளையாக இருக்கட்டும் எடுத்துவைக்கும் முதல் அடியில் தான் அனைத்தும் தொடங்குகிறது.
அதனால் அடுத்த அடி சிந்திக்கத் தக்கதாய் இருக்கட்டுமே!
தொடர்ந்து பேசுவோம்
அன்புடன்
அருண்மொழி