சென்னை:
கடந்த டிசம்பர் 13-ந் தேதி மதுரையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் 4-ம் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட கமல்ஹாசன், 2-ம் கட்ட பிரசாரத்தை சென்னை போரூரில் இருந்து கடந்த 20-ந்தேதி தொடங்கினார்.
காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்திலும் கமலின் 2-ம் கட்ட பிரசாரம் நடைபெற்றது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரத்தையும், சேலம், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 4-ம் கட்ட பிரசாரத்தையும் கமல் முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (10-ந்தேதி) முதல் கோவையில் கமல்ஹாசன் 5-ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு கோவையில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்கிறார். 4.30 மணிக்கு லீமெரிடியன் ஓட்டலில் உள்அரங்க கூட்டம் நடைபெறுகிறது. இது சிறப்பு, மக்கள் சந்திப்பாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.
10-ந்தேதி மாலை 5.15 மணிக்கு சின்னியம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் ஹோப்ஸ் கல்லூரி, பன்மால், புளியங்குளம் விநாயகர் கோவில் சந்திப்புகளில் பேசுகிறார்.
இரவு 7.15 மணி அளவில் லட்சுமி மில், வ.உ.சி. பூங்கா வழியாக காந்திபுரம் சென்று கிராஸ் கட் ரோட்டில் மக்களை சந்திக்கிறார்.
சீரநாயக்கன் பாளையம், பி.என்.புதூர், வடவள்ளி தொண்டாமுத்தூர், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் பேசும் கமல்ஹாசன் முதல்நாள் பிரசாரத்தை ராஜாதெரு தேர் முட்டி பகுதியில் முடிக்கிறார்.
வருகிற 11-ஆம்தேதி காலை 11 மணிக்கு துடியலூர் எம்.டி.பி. சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், சரவணப்பட்டி, அன்னூர், அவிநாசி, சி.டி.சி. பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அனுப்புற பாளையம் புதூர், பாண்டியன் நகர் பஸ் நிலையம், பெருமாநல்லூர், குன்னத்தூர், கோபி செட்டிபாளையம், பவானி, சித்தாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக தெருமுனை பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் கமலின் 2- ஆம் நாள் பரப்புரை கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே நிறைவடைகிறது.
3- ஆவது நாளான 12- ஆம்தேதி காலை 11 மணிக்கு ஈரோடு ஆலயமணி மகாலில் உள் அரங்க சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். பின்னர் லக்காபுரம், மொடக்குறிச்சி பஸ் நிலையம், சிவகிரி அன்னமேடை ஆகிய இடங்களில் பேசும் கமல், முத்தூர் வழியாக காங்கேயம் சென்று அங்குள்ள பெரியார் சிலை சந்திப்பிலும் உரையாற்றுகிறார்.
தாராபுரம், மாடத்துகுளம், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் பேசிவிட்டு பொள்ளாச்சி செல்லும் கமல்ஹாசனுக்கு உஞ்சவேலம்பட்டியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் பொள்ளாச்சி தேர்முட்டி, பொள்ளாச்சி திடலில் பிரசாரத்தை முடித்துவிட்டு பொள்ளாச்சி தலைமை அலுவலகத்துக்கு செல்லும் கமல், காந்தம் மகாலில் நடைபெறும் உள் அரங்கு சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
4-வது நாளாக வருகிற 13-ஆம் தேதி கோவை தாஜ் ஓட்டலில் காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன், சுந்தரபுரம் சங்கம் தெரு, மதுக்கரை பலாத்துறை ஆகிய இடங்களில் பேசிவிட்டு செல்வம் மஹாலில் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்.
இந்த 4 நாள் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார். பிரசாரத்தை முடித்துவிட்டு 13-ஆம் தேதி இரவு கோவையில் இருந்து கமல்ஹாசன் சென்னை திரும்புகிறார்.