டெகுசிகல்பா-
ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஜூலியோ(65), விக்டோரியா. கணவன் மனைவியான இவர்கள் கார்மென் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25- ஆம் தேதியில் ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடைபயணத்திற்குச் சென்றுள்ளார்.
இவர் தான் வசித்த பகுதியில் அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியான திரினிடேட் என்ற இடத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜூலியோ விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால், அவர் இன்று வீட்டிற்கு வரவில்லை.
நடைப்பயணமாக சென்ற தனது கணவர் வராததால் சந்தேகமடைந்த மனைவி விக்டோரியா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த 30- ஆம் தேதி எல் கார்மென் பகுதியில் உள்ள மருத்துவமனையில் விக்டோரியாவுக்கு இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் உங்களது கணவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்த நபரை அடையாளம் காண நீங்கள் வர வேண்டும் என விக்டோரியாவுக்கு மருத்துவமனை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வரும்போது கணவரின் அடையாள சான்றிதழை கொண்டு வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த விக்டோரியா தனது கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிணவறையில் இருந்த முதியவர் உடலை மருத்துவ ஊழியர்கள் காண்பித்து இது உங்கள் கணவரா என அடையாள காட்டுங்கள் என கேட்டுள்ளனர். அந்த உயிரிழந்த நபரை பார்த்த விக்டோரியா இவர் தனது கணவர் ஜூலியோ தான் இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த அந்த நபரின் உடலை விக்டோரியாவிடம் மருத்துவ ஊழியர்கள் ஒப்படைத்தனர். உயிரிழந்தவர் தனது கணவர்தான் என நினைத்துக்கொண்ட விக்டோரியா அந்த உடலை பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார்.
அந்த நபரை அடக்கம் செய்யும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றபோது விக்டோரியாவின் மகன் ஒருவர் இது நமது தந்தை தான என சந்தேகம் உள்ளது என கேட்டுள்ளார். ஆனால், அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
இறுதியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரை விக்டோரியா, அவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், திரினிடேட் மாநகராட்சி பகுதியில் மயங்கி விழுந்த ஜூலியோவை அவ்வழியாக சென்ற சிலர் கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ஒரளவு நினைவு திரும்பியதையடுத்து தனது வீடு எங்கு உள்ளது என்ற தகவலை ஜூலியோ தெரிவித்துள்ளார்.
ஜூலியோவின் வீடு உள்ள இடம் குறித்து தகவலறிந்த மருத்துவ ஊழியர்கள் அவரது உடல்நலம் சற்றும் முன்னேறிய பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதாவது, தனது கணவர் இறந்து என்று கடந்த 30- ஆம் தேதி வேறு ஒரு நபரை விக்டோரியா அடக்கம் செய்ததில் இருந்து 4 நாட்கள் கழித்து ஜனவரி 3- ஆம் தேதி ஜூலியோ வீட்டிற்கு வந்தார்.
கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார். அங்கு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததைக் கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார்.