வாஷிங்டன்-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டடத்தில் கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது அங்கு நுழைந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைவதை தடுக்க கேப்பிடல் கட்டட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் போலீஸ் உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான வன்முறை தாக்குதல் நாஜி தாக்குதலை போல ஒத்திருந்தது என கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், நாஜிக்கள் 1938-இல் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை மேற்கொண்டனர், அதேபோல், கடந்த புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்ட டிரம்பின் ஆதரவாளர்கள் நாஜிக்கு சமமானவர்கள் என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபராக திகழ்பவர் டிரம்ப் என காட்டமாகக் கூறிய அர்னால்டு, டிரம்ப் முதுகெலும்பு அற்றவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.