எம்ஜிஆர் பரிசளித்த வெளிநாட்டு கேமரா: தனி அறையில் வைத்து பாதுகாக்கும் எழுத்தாளர்

எம்ஜிஆர் தனக்கு பரிசளித்த வெளிநாட்டு கேமராவை இன்றைக்கும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார் தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜதாசன்.
எம்ஜிஆர் குறித்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளதுடன் இதற்காக தனி அறையும் கட்டி பாதுகாத்து வருகிறார்.சிறுவயதில் ஏற்படும் ஈடுபாட்டிற்கு வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் திறன் உண்டு. விளையாட்டு, கலை, தனித்திறன் என்று ஒருவருக்கு ஒருவர் இது மாறுபடும்.

வாழ்க்கைக்காக ஒரு பாதையில் பயணித்தாலும் மனஅளவில் இந்த ஆர்வம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் தேனி பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்த ராஜதாசனும் ஒருவர். சிறுவயதில் திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர். மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் அவரின் புகைப்படங்கள், தகவல்கள் எதில் இடம்பெற்றாலும் அவற்றை சேகரிக்கத் துவங்கினார். பேனா, கீசெயின், பாட்டுப் புத்தகம், ஸ்டாம்ப், பயணச்சீட்டு (எம்ஜிஆர். போக்குவரத்துக்கழகம்), நாளிதழ், சிற்றிதழ், வார, மாத இதழ்கள், ஸ்டிக்கர் என்று ஒவ்வொன்றையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

25ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பிற்கு வரும் திரைப்பட பிரபலங்கள் பலர் தேனியில் உள்ள விடுதியில் தங்குவது வழக்கம். அங்கு ராஜதாசன் மேலாளராக பணிபுரிந்ததால் திரைப்படத்துறையினருடன் பழகி எம்ஜிஆரின் அபூர்வ புகைப்படங்கள் பலவற்றையும் வாங்கியுள்ளார். ஏராளமான சேகரிப்புகள் இவரை எம்ஜிஆரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நாளிதழ்களில் இவர் குறித்த தகவல்கள் அதிகம் வெளியானதால் கட்சியினர் இவரை எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்றனர்.

சேகரிப்புகளை பார்த்து மகிழ்ந்த எம்ஜிஆர் தான் பயன்படுத்திய ஜப்பான் நாட்டு கேமரா, லென்ஸ், ஜெர்மனி நாட்டு போகஸ் லைட் உள்ளிட்டவற்றை இவருக்கு வழங்கியுள்ளார். கவிஞர், எழுத்தாளர், சமூக சேவகர் உள்ளிட்ட பல பங்களிப்புகள் இருந்தாலும் எம்ஜிஆர் வழங்கிய பரிசு இவருக்கு தேனியில் தனித்துவ அடையாளமாகவே விளங்கி வருகிறது. எம்ஜிஆர். கேமரா வைத்திருப்பவர் என்றே பலரும் இவரை சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து ராஜதாசன் கூறுகையில், எம்ஜிஆர் குறித்த படங்கள், தகவல்களை சேகரிக்க ஊர்ஊராக சென்றுள்ளேன். எம்ஜிஆருக்காக புகைப்படம் எடுப்பவர்களைத் தொடர்பு கொண்டும் அபூர்வமான படங்களை வாங்கி இருக்கிறேன். இவற்றை எல்லாம் சேகரித்து முதன்முதலில் நான்தான் கண்காட்சி நடத்தினேன். பரிசு, தர்மம் தலை தாக்கும் உள்ளிட்ட படங்களில் அவருடைய சொந்த கேமராவை பயன்படுத்தி இருந்தார். அவரை சந்திக்கும் போது அதை கேட்டேன். அவரும் ஆசையாக எனக்குப் பரிசளித்து விட்டார். மேலும் எம்ஜிஆர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது வைத்திருந்த லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டு மற்றும் ஸ்டாம்புகளையும் வைத்துள்ளேன்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அவரது சேகரிப்புகளை கண்காட்சியாக நடத்தி இருக்கிறேன். நூற்றாண்டு மலர் தயாரிப்புக்குழுவிற்கு பல்வேறு விபரங்களையும், அபூர்வ படங்களையும் அளித்திருக்கிறேன். இதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் என்னைப் பாராட்டினர்.

காலத்தை வென்ற காவிய நாயகன் எம்ஜிஆர் மற்றும் ஆன்மிக நூல் ஒன்றையும் எழுதி உள்ளேன். நாடகம், தமிழ்ச்சேவை உள்ளிட்டவற்றைப் பாராட்டி தமிழக அரசு 2010-ல் எனக்கு கலைச்சுடர்மணி விருதையும், 2019-ல் தமிழ்செம்மல் விருதையும் அளித்துள்ளது. ஆராய்ச்சிப் படிப்பிற்காக ஏராளமான மாணவர்களுக்கு எம்ஜிஆர் குறித்த தகவல்களையும் அளித்து வருகிறேன். ரூ.5 லட்சத்திற்கு மேல் இந்த சேகரிப்பிற்காக செலவழித்து இருக்கிறேன். இவற்றைப் பத்திரப்படுத்த வீட்டு மாடியில் தனி அறை கட்டியிருக்கிறேன். எம்ஜிஆர் குறித்த அருங்காட்சியகம் அமைக்க அரசு உதவினால் என்னிடம் உள்ள ஏராளமான சேகரிப்புகள் பலரின் பார்வைக்குச் சென்றடையும் இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here