பள்ளிப்பட்டு-
பொதட்டூர்பேட்டையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெய்த மழைக்கு முழுமையாக நிரம்பி உள்ளது.
ஏரிப் பகுதியில் ஏராளமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு கால்நடை வளர்ப்போர் அழைத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
ஏரியில் வளர்ந்துள்ள மீன்களை விற்பனை செய்ய ஏதுவாக பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற ஏலத்தில் ரமேஷ் ரூ.90 ஆயிரத்திற்கு குத்தகை உரிமம் பெற்றார்.
இந்நிலையில், ஏரியில் நேற்றுக் காலை திடீரென ஏராளமான மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. இதனை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், நீர்நிலை உயிரினங்களும் இறந்து கிடந்தன. இதனால் ஏரியில் சமூக விரோதிகள் விஷ மருந்து கலந்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக போலீசார் தண்ணீரில் விஷ மருந்து கலந்த நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.