1,200 மாணவர்கள் இணைந்து 12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட 100 செயற்கை கோள்கள் நாளை பலூன் மூலம் விண்ணில் பறக்க விடப்படுகின்றன.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை , ஸ்பேஸ்ஜோன் இந்தியா , மார்ட்டின் குரூப் கம்பெனி ஆகியவை இணைந்து மாணவர்கள் மூலம் செயற்கைகோள் கண்டுபிடிப்பு நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தன.
செயற்கைக்கோள் வடிவமைக்கும் பணியில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் , வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 1,200 பேர் சேர்ந்து 100 விதமான செயற்கைக்கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட 100 செயற்கைக்கோள்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானம் ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பலூன் மூலம் வானில் பறக்கவிடப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாணவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள்களுடன் கூடிய பலூன் ஏவுதல் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் தலைவர் சிவதாணுபிள்ளை, அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், ஷேக் சலிம், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் உள்ளிட்ட கலாம் குடும்பத்தினரும் மற்றும் இந்த செயற்கைகோள்களை கண்டுபிடித்த இந்தியா முழுவதும் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 1000 மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 100 பள்ளிகளில் உள்ள 1,200 மாணவர்கள் சேர்ந்து 100 செயற்கை கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செயற்கைக்கோள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை, காற்றின் வேகம், வானிலை, கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.