சிறுமியின் துண்டான விரலை சரி செய்த அரசு மருத்துவமனை… டாக்டருக்கு குவியும் பாராட்டு

திருச்சி:

துவரங்குறிச்சியில் சிறுமியின் துண்டான விரலை அறுவைச் சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை டாக்டர் சரி செய்து சாதனை படைத்தார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள தெற்கு எல்லை காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் சரண்யா (வயது 12). இவர் கரும்பு வெட்டும் போது இடது சுண்டு விரல் முன்பகுதி பாதி நகத்துடன் துண்டானது.

துண்டான விரலின் பகுதியை எடுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று விட்டு பின்னர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு டாக்டர் ஜான் விஸ்வநாதன் சிகிச்சை செய்து துண்டான விரலை திரும்பவும் ஓட்ட வைக்க ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சாதாரண எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் செய்வதற்குக் கூட அறுவைச் சிகிச்சை கருவிகள் இல்லாத நிலையில் தனது சொந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை கருவிகளைக் கொண்டு துண்டான விரலை இணைக்கும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

மருத்துவமனையின் செவிலியர், ஊழியர்களின் ஒத்துழைப்போடு அறுவை சிகிச்சை அரங்கை இரவோடு இரவாக தயார் செய்து, வேண்டிய கருவிகளை ஏற்பாடு செய்து சரண்யாவின் துண்டான விரலின் எலும்பை இணைத்து நரம்புகள் சதைகள் அனைத்தையும் தலைமுடியிலும் குறுகிய விட்டம் கொண்ட சிறப்பு நுண் தையல் மூலமாகத் துண்டான விரலை இணைத்தார்.

இதுபோன்ற சிக்கலான நுணுக்கமான அறுவை சிகிச்சைகள் உருபெருக்கம் செய்து காண்பிக்கக்கூடிய நவீன மைக்ரோஸ்கோப் கருவி உள்ள தனியார் மருத்துவமனைகளில்தான் செய்ய முடியும்.

இப்படிப்பட்ட சவாலான சிக்கலான நுணுக்கமான அறுவை சிகிச்சைகளை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலே செய்து சாதித்துக் காட்டிய ஜான் தலைமையிலான மருத்துவக் குழுவிற்குப் பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here