பெங்களூருவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் நேற்று காலை சாலை மார்கமாக சென்னை கிளம்பினார் சசிகலா. அவருக்கு தமிழக எல்லையில் இருந்து ஒவ்வொரு பகுதியிலும் அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் அளிக்கப்பட்டதால், அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்களின் காரில் மாறி அதிமுக கொடியுடனே பயணித்தார் சசிகலா.
தொண்டர்கள் வரவேற்புடன் சசிகலா.
வாணியம்பாடியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, அடக்குமுறைகளுக்கு தான் அடிபணிய மாட்டேன் எனவும், தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார். ஓரணியில் நின்று பொது எதிரியை சந்திக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
வழிநெடுக மேளதாளங்கள் முழங்க, பூத்தூவி சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று காலை சசிகலா சென்னை வந்தடைந்தார்.
முன்னதாக சென்னை ராமாபுரத்திற்கு வருகை தந்த சசிகலா, அங்கிருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவர், தியாகராய நகர் வந்தடைந்தார்.