மியான்மரில் வலுக்கும் போராட்டம்
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும். அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ‘போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில், யாங்கூன், மாண்டலே, தலைநகர் நேபியிதா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்றும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, மியான்மருக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளது.