கோலாலம்பூர், மே 3-
கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சில மாநிலங்களில் அடுத்த வாரம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ 3.0) அமல்படுத்தப்படும் என்ற தகவல்களை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று நிராகரித்தார்.
இது ஒரு தவறான யூகம் என்று குறிப்பிட்ட அவர், தேசியப் பாதுகாப்பு மன்றம் இதுபற்றி விவாதிப்பதற்கு இன்னும் கூடவில்லை என்றார்.
தற்போது நடப்பில் இருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியிருப்பதற்குப் பின்னர் தேசியப் பாதுகாப்பு மன்றம் அதனை விவாதிப்பதற்கு இன்னும் கூடவில்லை என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் இன்று மே 3ஆம் தேதி தொடங்கி எம்சிஓ 3.0 மீண்டும் அமல்படுத்தப்படும் என்று உள்நாட்டு ஆங்கில ஏடு ஒன்று வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்திக்கு அமைச்சர் பதிலுரைத்தார்.