2022 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள்
85 ஆகப் பதிவு
இவ்வாண்டு பாலர்பள்ளி 3 வகுப்பறைகளாக அதிகரிப்பு
சிரம்பான்,
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட 2022 ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் பதிவு நடவடிக்கையில் பண்டார் ஸ்ரீ ஙெ்ண்டாயான தமிழ்ப்பள்ளியில் மொத்தம் 85 பேர் பதிவு செய்துள்ளதாக அப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ லோகேந்திரன் நாராயணசாமி கூறினார்.
அதேவேளை இவ்வாண்டு தொடங்கி இப்பள்ளி பாலர்பள்ளி வகுப்பறைகள் மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் இவ்வாண்டு அதன் மாணவர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வகுப்பறைகள் மூன்றானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தற்போது இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவியுள்ளதாக அப்பள்ளியை வடிவமைத்து, நிர்மாணித்த லோகேந்திரன் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு இப்பள்ளி வகுப்பறைகள் நெருக்கடியை எதிர்நோக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இப்பள்ளியில் புதிய இணை கட்டடம் ஒன்று கட்டுவதற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்துள்ளது என்றும் ஆங்கில மொழியில் பற்று கொண்ட பெற்றோர் பலர், குறிப்பாக வழக்கறிஞர், மருத்துவர் போன்ற கல்விமான்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் அனுப்புவதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி சாந்தி அச்சுதன் கூறினார்.
இப்பள்ளியில் அறிவை வளர்க்கும் பாடப் புத்தகங்களைத் தவிர்த்து, நன்னெறி, வாழ்வியல், அறிவியல், கண்டுபிடிப்பு, தொழில் திறன் போன்ற பல்வேறுதுறை கல்வியைக் கொண்டு தலைசிறந்த மாணவர்களைச் செதுக்கும் இலக்கைக் கொண்டு பள்ளி நிர்வாகம் செயல்படுவதால், நாளுக்கு நாள் பெற்றோரின் ஆதரவு பலமடங்காக அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
நாகேந்திரன் வேலாயுதம்
























