மெக்சிகோ: மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியா என்ற பகுதியில் உள்ள விளைநிலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த பள்ளம் சுமார் 300 அகலத்திலும், 60 அடி ஆழம் கொண்டதாகவும் வட்ட வடிவில் காணப்படுகிறது.
நீங்கள் பார்க்கும் இந்த பள்ளம், வானத்தில் இருந்து பறந்து வந்து விண்கலம் மோதியதன் காரணமாக உருவான பள்ளம் போல தோற்றமளிக்கிறது அல்லவா? இந்த பிரம்மாண்டமான பள்ளம் மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியாவில் ஏற்பட்டுள்ளது.
வளர்ந்த பள்ளம்
பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியாவில் சுமார் 300 அடி அகலத்திலும், 60 அடி ஆழத்திலும் உள்ள பள்ளம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த வாரம் சிறிய அளவில் தோன்றிய பள்ளம், நாளாக நாளாக பெரிய குளம் போல் மாறியது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மெக்ஸிகோ அரசாங்க அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
அருகில் போக வேண்டாம்
அப்போது அவர்கள் ஆய்வு செய்த போது நிலத்தடி நீரால் குளம் போல் காட்சிய அளிக்கும் பள்ளம் சுமார் 60 அடி ஆழம் வரை இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். பள்ளத்தின் அருகே செல்ல வேண்டாம் என்று உள்ளூர் மக்களை எச்சரித்துள்ளனர்.
காயமில்லை
இந்த பள்ளம் சனிக்கிழமையன்று தோன்றியபோது, அது சில மீட்டர் அளவு மட்டுமே இருந்தது, ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 70,000 சதுர அடி விவசாய நிலத்தை விழுங்கி விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை யாரும் காயமடையவில்லை. அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த குடும்பம் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா செய்தி நிறுவனமான நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.