இந்தியா: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான எகியா. சாலையோர கையேந்தி பவன் நடத்தி வரும் எகியா தன்னுடைய கடந்த கால நினைவுகளையும், சபதத்தையும் கூறியுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு எகியா அவர்களின் கையேந்தி பவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தேநீர் அருந்த வந்துள்ளார். அப்போது எகியா வேட்டியை மடித்து கட்டியிருந்ததை பார்த்து, ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எகியாவை தகாத வார்த்தையில் மிக மோசமாக திட்டியுள்ளார்.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த எகியா உடனடியாக உள்ளே சென்று தனது வேட்டி, சட்டையை கழற்றி வீசிவிட்டு நைட்டி அணிந்துக்கொண்டு வந்துள்ளார்.
இச் சம்பவம் நடந்து 18 வருடங்கள் கடந்துவிட்டன். ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக அவர் நைட்டியுடனேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எகியாவின் இந்த கதையால் அப்பகுதியினர் அவரை ‘மேக்ஸி மாமா’ என அழைத்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பிலும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். எகியா தன்னிடம் இருந்த ₹23 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால், 2 நாட்கள் வரிசையில் காத்து நின்றும் மாற்ற முடியவில்லை.அதோடு வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்ததால் எகியா தலை சுற்றி மயங்கி விழுந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த எகியா ₹23 ஆயிரம் நோட்டுகளையும் எரித்து போராட்டம் நடத்தியுள்ளார்.பணத்தை எரித்ததோடு மட்டுமில்லாமல் தன்னுடைய மீசையை மழித்தும், தலையில் பாதி முடியை மொட்டையடித்தும் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.