மாஸ்கோ நீதிமன்றம் அதிரடி!
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அலெக்ஸி நவால்னி உருவாக்கிய ஊழல் தடுப்பு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறி மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ‘நவால்னி ஜெயில் விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது ஊழல் தடுப்பு அமைப்பு பயங்கரவாதத்தைப் போன்றது. அரசுக்கு எதிராகச் செயல்படும் நவால்னியின் அமைப்புக்குத் தடை விதிக்கிறோம். நவால்னி அமைப்பை வெளிப்படையாக ஆதரிக்கும் எவரும் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது’ என்று செய்தி வெளியானது.
மாஸ்கோ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நவால்னியின் ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக நவால்னி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த அலெக்ஸி நவால்னி?
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது.
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனது கைது குறித்து எதிர்ப்பு தெரிவித்து சிறையில் போராட்டத்தில் நவால்னி ஈடுபட்டு வருகிறார்.